Friday, November 19, 2010

தளிர்

2


தீபாவளி என்றால், அவன் பள்ளியில் குறைந்தது மூன்று நாட்களாவது விடுப்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குக் கண்ணன் வீட்டில், அவன் அம்மாயி வீட்டுக்குப் போவதுதான் வழக்கம். அவன் அம்மாயி தாத்தாவிற்கு இரண்டு மகள்கள் உண்டு. கண்ணனுக்கு மாமன் இருந்தார். அவர் கண்ணனுக்கு இரண்டு வயது இருந்த போதே இறந்துவிட்டார். அவன் அப்பா வீட்டிலோ, கண்ணனின் இரண்டு அத்தைகள், அத்தை பிள்ளைகள் என ஒரு பட்டாளமே இருக்கும். இந்த தீபாவளிக்கு ஏனோ கண்ணனுக்கு அவன் ஆத்தா வீட்டிற்குச் செல்ல வேண்டுமெனத் தோன்றிவிட்டது. சொன்னால் கேட்கவா போகிறான்.

"நோம்பீனா, அம்மாயி வீட்டுக்குத் தான் போகணும்", சொல்லிப் பார்த்தாள் அம்மா.
"அதெல்லாம் முடியாது. நான் ஆத்தா வீட்டுக்குப் போகணும்", அடம் பிடித்தான்.

தீபாவளிக்கு முதல் நாள், அவன் அப்பா, அவனை புல்லெட் வண்டியில் ஏற்றி அம்மாயி வீட்டிலிருந்து தன் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார். இரண்டு ஊர்களும் நான்கு மைல் தொலைவிற்குள்தான். அங்கு ஏதோ அவன் தன் அத்தை மக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மறுநாள் தீபாவளியன்று, காலையில் ஆறு மணிக்கெல்லாம் அங்கிருந்து திரும்ப அம்மாயி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டார். கண்ணனுக்கென்று அவன் அம்மா புதுத்துணி வாங்கி வைத்திருந்தாள். அது ஏனோ கண்ணுக்குப் பிடிக்கவில்லை. அந்தத் துணியை உடுத்திக் கொள்ளமாட்டேன் என்று அடம். என்றுமில்லாமல், அவன் அப்பாவிற்கு அவன்மேல் கோபம் வந்தது. பாவம் அந்த குழந்தை.. வெறுமேனியுடன் நின்றிருந்த கண்ணனின் மேல் ஒரு தோல் பெல்ட்டினால் விழுந்தது சுரீர் சுரீரென்று.. கதறிக்கொண்டு ஓடிச் சமயலறையிலிருந்த அவன் அம்மாயியின் கால்களைக் கட்டிக்கொண்டான். கண்ணனுக்கு அன்று அவன் அப்பாவின் செயல் ஒரே விந்தையாயிருந்தது.

அந்தத் தீபாவளி முடிந்து ஐந்தாறு வாரங்கள் இருக்கும். அவர்களெல்லாம் ஊருக்குச் சென்றிருந்தபோது, ஈரோட்டிலில் அவர்களிருந்த வீட்டில் களவு போய்விட்டது. இரண்டு லட்சம் பெறுமானமுள்ள நகைகள், வி.சி.டி பிளேயர் இன்னும் பல பொருட்கள். போலீஸ் வந்து போய்க்கொண்டிருந்ததால், சிறுவன் பயப்படுவான் என்று, கண்ணனை அவன் பெரியப்பா தன் வீட்டிற்குக் கூட்டிப்போய்விட்டார். வீட்டில் களவுபோனதைப் பற்றிக் கண்ணனுக்குக் கவலையே இல்லை. அவன் இளந்தளிராயிற்றே!

பின் ஒரு மாதத்தில், அவன் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. ஒரே இருமல். அவன் அம்மா எவ்வளவு சொல்லியும், அவர் மருத்துவரைப் பார்க்க மறுத்துவிட்டார். ஒருநாள் இவர்களைக் காண வந்திருந்த கண்ணனின் அத்தை, தன் தனையன் நிலைகண்டு, அவரை வலுக்கட்டாயமாய்க் கோயம்புத்தூரிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட்டார். கண்ணன் அப்போது ஒன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான். அவன் அந்த ஆண்டு அரையாண்டுத் தேர்வே எழுதவில்லை. கோயம்புத்தூரிலுள்ள அவன் அத்தை வீட்டிலேயே இருந்தான். அவன் அம்மா, அம்மாயி, ஆத்தா என எல்லாரும் அவர் இருந்த ஆஸ்பத்திரியிலேயே தான் இருந்தார்கள். கண்ணனைத் தினமும் காலையில் அவன் அத்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுவிடுவாள். இப்படித்தான் ஒரு மாதமாகக் கண்ணனின் தினசரி அலுவல்கள்.

அன்று மருத்துவமனை வந்த அவனை அவன் ஆத்தா அழைத்தாள்.
"தம்பீ.."
"என்னங்காத்தா?"
"வா சாமீ.. உங்கொப்பனப் போய்ப் பாத்துட்டு வந்தரலாம்."
"ஐயே .. நான் வரமாட்டேன்", சிணுங்கத் தொடங்கினான், "பயமா இருக்கும்."
அவன் இங்கு வந்ததிலிருந்து அந்த ஐ.சி.யு-வினுள் ஒரே முறைதான் சென்றுள்ளான். மற்றபடி, வெளியே உள்ள பூங்காவிலோ, கேண்டீனிலோதான் இருப்பான். உள்ளே போவதென்றால், ஒரே பயம். அதுவும் அவன் அப்பாவிற்குப் பொறுத்தியிருந்த ஆக்சிஜன் டியூபு, அங்கு இருக்கும் சிறு பல்புகள் கொண்ட இயந்திரம், இவற்றைப் பார்த்தால் அவ்வளவுதான். பாவம், அவருக்கும் அவர் ஆசை மகனைப் பார்க்கவேண்டும் போல் இருந்திருக்கிறது. இந்த கிழவியிடம் சொல்லியிருக்கிறார்.
"நான் இருக்கறேனல்லோ. வா சாமீ.. உள்ள போய்ப் பாத்துட்டு வந்தரலாம்."
"நா வர்ல .."
எப்படியோ அவனை உள்ளே கூட்டிச் சென்றுவிட்டாள் அவள். உள்ளே, தூங்கிக் கொண்டிருந்த தன் மகனிடம், "டேய்.. டேய்.. இங்க பார்ரா" மெல்ல அழைத்தாள்.
கண்ணின் அப்பா விழித்து, "தம்பீ.." என்றார் மெல்லிய குரலில்.
கண்ணனுக்கு என்ன செய்வதென்றே தெரிவில்லை.
"ப்ப்ப்போலாம் .." சிணுங்கினான்.
"சேரி .. பயப்படறான்.. இரு, நாங் கொண்டோய் வெளிய உட்டுட்டு வந்தர்றேன்."

அவன் அப்பாவிற்கு ஒன்றுமில்லை. சிறு வயதிலிருந்தே இதயம் கொஞ்சம் வலிமையிழந்திருந்தது. ஆனால் சிறுவயது முதலே, அவர்தான் அந்த ஊரின் குறும்புக்காரச் சுட்டிகளில் முக்கியமானவராய் இருந்திருக்கிறார். இப்போது குடியினால், கல்லீரல் பழுதடைந்துவிட்டது. கூடவே நுரையீரலில் கோளாறு - காசநோயினைப் போல. மாரடைப்பும் வேறு. அவ்வளவுதான்.

அன்று மாலை ஒரு ஐந்து மணியிருக்கும். கண்ணன் காரின் பின் சீட்டில் அவன் அம்மாயியின் மடியிலமர்ந்திருந்தான். அருகில் அவன் அம்மா. கார் கிளம்பியது. கண்ணன் அவன் தாயிடம் கேட்டான், "அவுரு எங்கம்மா?".
"..", மௌனம்.
அவளுக்கு புரியவில்லையோ என்று நினைத்துக்கொண்டு, தன் கேள்வியினைத் தெளிவாகக் கேட்டான்.
"அப்பா எங்கம்மா?"
மௌனம்.
அப்படியே தூங்கிவிட்டான்.

கார் அவன் அப்பாவின் சொந்த ஊருக்குள் நுழைந்தது. அவன் ஆத்தா வீடு என்று ஆசையுடன் அழைக்கும் அந்த வீட்டின் கேட்டினுள் நுழைந்ததும், காரில் இருந்த அனைவரும் அழத் தொடங்கினார்கள். கண்ணணுக்கு ஒன்றுமே புரியவில்லை.
"ஏம்மா அழுவறீங்க?"
அழுகை தொடர்ந்தது.

அதன்பின் அந்த மச்சு வீட்டின் திண்ணைகளிலும், தொட்டியிலும், சமயலறையிலும் அலையத் தொடங்கினான். ஒரு எட்டு மணியிருக்கும். கண்ணன், ஆசாரத்தின் எதிர்ப்புறம் இருக்கும் திண்ணையருகிலுள்ள, அவன் பெரியப்பா அறையின் கதவின் நிலவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். அப்போது சைரன் போட்ட ஆம்புலன்சில் இருந்து ஒரு நீளமான துணிக்கட்டினைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். எதிரில் இருந்த ஆசாரத்தில் அழுகை வலுத்தது. நடுவில் இருந்த தொட்டியில், அந்த ஊரின் வண்ணான், நாவிதன், பறையன், இன்னபிற தொழிலாளி வீட்டுப் பெண்களெல்லாம் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது தான், ஆம்புலன்சில் வந்திருந்த அவனது அத்தை மகன், அந்தச் சேதியைச் சொன்னான். அவனும் சிறுவன்தான். ஆனால், கண்ணனைவிட ஒரு இரண்டு ஆண்டுகள் மூத்தவன்.
"கண்ணா.."
"என்னங் மச்.." இப்படித்தான், முழுதாக மச்சான் என்று கூப்பிடாமல் விழுங்கி விடுவான்.
"அங்க தூக்கிட்டு போறது உங்க அப்பாடா.."
கண்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மெல்ல ஒரு புன்னகையை உதிர்த்தான்.
"செத்துப் போய்ட்டாங்கடா..", மச்சான்.
"ஓஹோ"
கண்ணன் மீண்டும் வீட்டினைச் சுற்றிவரத் தொடங்கினான். பிணம் வைத்திருந்த ஆசாரத்தின் பக்கம் அவன் போகவே இல்லை. ஆனால், கண்ணனுக்கு மனதினுள் ஒரு சிறு அச்சம். எங்கோ உடன்கட்டை ஏறுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான் போலும். அதனால்தான்! அப்பா இல்லையென்றால், இனி அப்பாவின் தாயான ஆத்தா, அப்புறம் அவன் அத்தைகள், அத்தை மக்கள், இவர்களை எல்லாம் பார்க்க முடியாதோ என்ற ஆதங்கமும் கூட. உள்ளே உள்ள அச்சத்தைக் காட்டி கொள்ளாதவனாய் ஓடித்திரிந்திருந்தான்.

காலையில் சடங்குகளெல்லாம் முடிந்தபிறகு, பிணத்தை எடுக்க (எரிக்க) ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்றார்கள். தெருமுனையுடன் பெண்களெல்லாம் அழுகையுடன் நின்றுவிட்டார்கள். கண்ணனின் மனதில் அச்சம் சற்றே ஓய்ந்தது. கண்ணனை அவன் பெரியப்பாதான் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். கூடவே மச்சானும், தங்கையான பெரியப்பா மகளும். நாவிதன்தான் கண்ணனையும், தண்ணீர்ப் பானையையும் தூக்கிக்கொண்டு பிணத்தைச் சுற்றி வந்தான். முகத்தை மூடுமுன், அங்கிருந்த பெரியவர்களெல்லாம், "அப்பா மொகத்தப் பாத்துக்க சாமி.." என்றார்கள். அவன் தன் தந்தையைக் கடைசியாகப் பார்க்கிறோமே என்ற கவலையே இல்லாதவனாய், சற்றே அந்தப்பக்கம் பிணத்தை நோக்கி ஒரு பார்வை பார்த்தான்.

கொல்லி வைத்த பின்னர், "மொட்டை அடிச்சுக்கறயா?", பெரியப்பா கேட்டார்.
"ம்ம்ஹூம்ம் .. மாட்டேன்", என்றான்.
குழந்தையை யாரும் கட்டாயப் படுத்தவில்லை. ஏதோ சாங்கியம் என்று வேறு மூன்று பேர் மொட்டை அடித்துக் கொண்டார்கள்.

இருபத்தொரு நாட்கள் அங்கேயே ஆத்தாவுடன் இருந்துவிட்டான். "தினமும் இரண்டுவேளை சூடம் பற்றி சாமிகும்படணும்" என்று. அதன்பின், மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான், அழுகை ஏதுமில்லாமல். காலையில் அழுவதுதான் எல்.கே.ஜி-யுடன் முடிந்துவிட்டதே!
பள்ளியில், சரண்யா கேட்டாள், "கண்ணா, உங்க அப்பா செத்துப் போய்ட்டாங்களாமே?"
எங்கோ கண்ட நிகழ்ச்சியைப் பேசுவதைப் போல, "ஆமா.. ஹார்ட் அட்டேக்..", என்றான் புன்னகையுடன். அதற்கு என்ன தெரியும், இளந்தளிராயிற்றே!

Monday, November 15, 2010

சின்னக் கண்ணன்

1


கண்கள் .. இவை ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெற்ற வரங்களாம். இவை கருப்பு வெள்ளையாயினும், எண்ணிலடங்கா நிறங்களைக் காணச்செய்யும் தன்மையன. மூளைக்கு எல்லா நிகழ்வுகளையும் படம் பிடித்துக் கொடுக்கும் கேமராக்கள் இவை. இப்படித் தான் கண்ணனின் கண்களும் அவனுக்கு எண்ணற்ற அனுபவங்களையும் நிகழ்வுகளையும் படம் பிடித்துக் கொடுத்தன. தமிழகத்தின் ஒரு மூலையில் காவிரியாறு சமவெளிப் பகுதிகளைச் சற்றே எட்டிப் பார்க்கத் தொடங்கும் இடத்தில்தான் ஈரோடு என்ற சிறிய நகரம் உள்ளது. அந்நகரைச் சுற்றியுள்ள பல கிராமங்களைப் போல் தான் கண்ணனின் ஊரும். என்னதான் பிளசர் காரில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு, ஒரு வேலையாள் ஓட்டப் பெயர் சொன்ன இடத்தில் இறங்கிக் கொள்ளும் வசதி படைத்திருந்தாலும், ஏதோ காலத்தின் கட்டாயத்தில் பள்ளத்தில் விழுந்து வசதிகள் போய்விட்டால், நடந்தோ, நகரப் பேருந்திலோ செல்லும் துணிவும், சிக்கனமாகக் குடும்பம் நடத்தித் தங்கள் பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு செல்லும் விவரமும் நிறைந்தவர்கள் கவுண்டன்மார் வீட்டுப் பெண்கள். பொன்னிற்கு ஈடாக விலை போகும் மஞ்சள் நன்கு விளையும் நிலங்களை உடையவர்கள் கவுண்டன்மார்கள். அப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவன்தான் கண்ணன்.

'வீட்டுக்கு ஒரு பிள்ளை' என்ற கோட்பாடு பிரபலமாய் இருந்த அந்தக்காலத்தில்தான் கண்ணன் பிறந்தான். ஆம், அவன் ஒரே பிள்ளை. அவன் தந்தையும் தாயும், அவன் படிப்பிற்காக, அவன் சிறியவனாக இருந்த போதே ஈரோட்டிற்கு வந்து விட்டார்கள். அவன் அப்பாவிடம் செல்லம் அதிகம். அப்பாவின் நெஞ்சில் ஏறித்தான் இரவில் தூங்குவான். அவன் தாயோ அவ்வளவாகச் செல்லம் இல்லை. காலையில் பள்ளிக்குச் சென்றிருப்பான் கண்ணன்; அவனது அப்பாவிற்குக் திடீரென்று அவனைப் பார்க்க வேண்டும் என்றிருந்தால், உடனே ஒரு பொட்டலம் சாக்லேட் மிட்டாய் வாங்கிக்கொண்டு, தன் புல்லெட் வண்டியில் அவன் பள்ளிக்குக் கிளம்பிவிடுவார். அவ்வளவு பாசம் அவன்மேல். அவன் அப்பாவிற்குப் பெரிய வேலை எல்லாம் ஒன்றும் கிடையாது. தமது ஊரில் உள்ள பரம்பரை நிலத்தைப் பார்த்துக்கொள்வதுதான்.

கண்ணன் ஒன்றும் பெரிய சுட்டியல்ல. வகுப்பில் இருக்கும் இடம் தெரியாது. அவ்வளவு அமைதி. அவன் எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் போது காலையில் பள்ளிக்கூட வேனில் ஏற்றி அனுப்புவதற்குள் பெரும் பாடாகி விடும். அழுது அடம் பிடித்து ஊரைக் கூட்டிவிடுவான். இப்படித்தான் ஒரு நாள் அவன் அப்பா வழிப் பாட்டி அங்கு வந்திருந்தாள். அவளை 'ஆத்தா' என்று தான் இவன் அழைப்பான். கண்ணன் உறவுமுறை கொண்டு கூப்பிடும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருள் அந்தக் கிழவியும் ஒருத்தி. மற்றவர்களை எல்லாம் 'ஏனுங் ..' 'வாங் ..' 'போங் ..' .. அவ்வளவுதான். ஏதோ ஒரு கரிசனத்தில், அன்று கண்ணனைக் கிளப்பி அனுப்பும் பொறுப்பை அவள் ஏற்றுக் கொண்டாள்.
"தம்பீ .. ", அப்படித்தான் அவள் கண்ணனை அழைப்பாள்.
"என்னங் ஆத்தா?"
"சாப்படலாம் வா"
"எனக்கு வேணாம் .."
"சாமி சாமியல்லோ .. வேண்டாம்னு சொல்லக்கூடாது. சீக்கரமா சாப்டுட்டு ஸ்கூலுக்கு போக வேணும். அப்பறம், உங்கொப்பன் நான் வந்துதான் நீ சாப்பட மாட்டீங்கறேனு சொல்லுவான். சாப்புடு சாமி."
இப்படி எல்லாம் ஏதோ சொல்லிச் சாப்பிட வைத்துவிட்டாள். பள்ளி வேன் வந்து ஆரன் அடித்துக் கொண்டு இருந்தது. எப்போதும் போல் அழுது ஊரைக் கூட்டி விட்டான். அவனுக்குப் பள்ளிக்குப் போவதே பிடிக்காது. வீட்டில் இருக்கும் விளையாட்டுச் சாமான்களோடு, சிறு சிறு எலெக்ட்ரிக் ப்ளக், கூழாங்கல், சிறிய சதுரமான மரக் கட்டைகள் - இவற்றைக் கொண்டு கோயிலில் சாமி வைத்தோ, பஸ் ஒட்டியோ விளையாடுவான். அதை விட்டால், பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு சிறிது நேரம் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருப்பான். எல்.கே.ஜி படிக்கும் வரை, பள்ளியில் அடிக்கடி மதியம் சாப்பிடும்போது வாந்தி எடுத்து விடுவான்; அவன் பள்ளியில் மதிய உணவிற்குப் பின் எல்லாக் குழந்தைகளையும் உறங்க வைப்பது வழக்கம். அப்படி உறங்கும்போது சிறுநீரோ மலமோ கழித்து விடுவான். அந்தச் சிறுவனுக்குள் அப்படி என்னதான் அச்சம் உண்டானதோ தெரியவில்லை. பள்ளி என்றால், அவனுக்குக் குலையே நடுங்கிவிடும். அவனுக்குப் பள்ளியில் விளையாடுவதென்றால், ஏதோ ஒரு இனம் புரியாது அச்சம் வந்துவிடும். மற்ற குழந்தைகளெல்லாம் சருக்கலிலோ ஊஞ்சலிலோ விளையாடும்போது, இவன் மட்டும் தனியே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். மாலையில் வீட்டிற்கு வந்தால், அவன் அம்மா அவனை ஆசையாக வேனில் இருந்து எடுத்து அணைத்துக் கொண்டு வருவாள். பின்னர், துணி மாற்றிக்கொண்டு அவனது விளையாட்டுச் சாமான்களுக்கு உயிர் கொடுக்கத் தொடங்கிவிடுவான். வெயில் போன பின்பு, சைக்கிள். அவன் தந்தை ஊரில் விவசாய நிலங்களைப் பார்த்துக் கொள்வதற்காகக் காலையில் போனால், மலையில் ஐந்தாறு மணிக்குத்தான் திரும்புவார். வந்தபின், உணவு எல்லாம் முடித்துக் கொண்டு ஒரு எட்டு மணிவாக்கில் கண்ணனையும் அந்த புல்லெட் வண்டியில் முன்னே அமர்த்திக்கொண்டு வெளியே சென்றுவிடுவார். கண்ணன் அங்குள்ள ஆம்லெட் கடையில் முட்டை தின்றுகொண்டிருப்பான். அவரோ பக்கத்துக் காம்ப்ளசில் உள்ள வைன் ஷாப்பில் தேவையான அளவிற்கு ஏற்றிக்கொண்டு வருவார். அவனுக்கு எதற்கு அங்கு வருகிறோம் என்று கூடத் தெரியாது. முட்டை தின்பதில் மும்முரமாக இறங்கி விடுவான். இப்படித் தான் கண்ணனின் வாழ்க்கை ஓடியது.

வாரம் முடிந்து விட்டால், கண்ணனை அவன் அம்மாவின் அம்மா வீட்டிற்குக் கூட்டிப்போய் விடுவார்கள். அங்கு தான் சனி ஞாயிறுகளைக் கழிப்பான். அங்கு போய்விட்டால், வெகு செல்லம். அவன் அம்மாயி (அம்மாவின் அம்மா) அவன் கேட்டதெல்லாம் செய்து கொடுப்பாள். அவனும் "அம்மாயி அம்மாயி .." என்று அவள் பின்னேயே திரிவான். ஆனால், தனது தாத்தாவைக் கண்டால், அவனுக்கு ஏதோ ஒரு பயம். "தாத்தா" என்று ஒரு முறை கூட அழைத்தது கிடையாது. அங்கு வாசலில் மணல் கொட்டி வைத்திருப்பார்கள். அதில் விளையாடிக்கொண்டிருப்பான். அவன் தாத்தா காரில் வரும்போது, தெரு முனையில் ஆரன் அடிப்பதுண்டு. யாராவது கார் வருவது தெரியாமல் ரோட்டில் வந்து விடுவார்களே என்ற எச்சரிக்கையில்தான். அந்தச் சத்தம் கேட்டால், மணலில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணன், நொடியில் உள்ளே ஓடி விடுவான்.

ஊருக்குச் செல்லாத வார இறுதிகளில், ஞாயிற்றுக் கிழமைகளில், வீட்டில் அசைவம் சமைப்பது வழக்கம். அனால், கண்ணனின் தாய் அசைவம் சாப்பிட மாட்டாள். ஏன் .. தொடக்கூட மாட்டாள். அவன் அப்பாதான் கறியைக் கழுவிச் சட்டியில் போடுவார். அவன் அம்மா அதைக் கிளறி விட்டுத் தொடாமல் சமைப்பாள். ஆட்டுக்கறிக் கொழுப்பும், சூப்பு எலும்பினை (சூப்பு என்றால் குடிக்கும் சூப்பு அல்ல. ஆட்டுக் கால் எலும்பில் உள்ள சாற்றை உறிஞ்சி உண்பதால், அதனைச் சூப்பு என்கிறார்கள் இப்பகுதியில்) உறிஞ்சிச் சாப்பிடுவதும் கண்ணனுக்குப் பிடிக்கும். ஆட்டு மூளையும் விரும்பிச் சாப்பிடுவான். அவன் அம்மாயி வீட்டில் கிடாய்ப் பொங்கல் வைத்தால், அவனுக்காக ஆட்டின் மூளையைத் தனியாக எடுத்து வறுத்து வைப்பாள் லட்சுமி அக்காள். அங்கு தோட்டத்தில் வேலை செய்யும் பலருள் அவளும் ஒருத்தி.

இப்படித்தான், அவன் குழந்தைப் பருவம் ஓடியது. எந்தக் கவலையும் இல்லை அவனுக்கு. ஏதோ வாழ்க்கை என்பது தட்டிக் கொடுத்து உறங்க வைப்பதும், பிடிக்கவில்லை என்றாலும் பள்ளிக்கு போவது போன்ற சில (உண்மையில் அது ஒன்று தான் அவனுக்குப் பிடிக்காது) கெட்ட கனாக்களும் நிறைந்தது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

(தொடரும்)