Sunday, February 05, 2012

மழைமேகம்

கண்ணனுக்கு அவன் பெரியம்மா நல்ல உடல் நலத்தோடு இருந்தபோதிலெல்லாம் அவ்வளவாக ஒன்றும் பாசம் இருந்ததில்லை. அவள் தன் தாயுடன் பிறந்தவள். கண்ணனின் அம்மாவிற்கு சுமாராகத்தான் படிப்பு வரும் என்றாலும், அவள் பொருளியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருந்தாள். அவன் பெரியம்மா நன்றாகப் படிப்பாள். இருப்பினும் நல்ல மாப்பிள்ளை வந்ததென்று, பி.எஸ்சி படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார் கண்ணனின் தாத்தா. அவன் பெரியம்மாவிற்கு இரண்டு மகள்கள் தான்; தவமிருந்து மூன்றாவதாகப் பெற்ற மகன் சிறு வயதிலேயே இறந்துவிட்டான். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்து நிம்மதியாய்க் காலம் கழித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் தெரியவந்தது அவளுக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது. புற்றுநோய் என்பது ஒன்றுமல்ல - உடலில் நன்றாக இருக்கும் உயிரணுக்கள் (செல்கள்) ஏதோ வேதியல் மாற்றத்தினால், கட்டுபாடின்றிப் பெருக்கமடைவதுதான்.

கண்ணன் கல்லூரியில் இறுதியாண்டு முடிக்கப்போகும் நேரம் அது. தேர்வுகள் எல்லாம் முடிந்து இறுதியாண்டுத் திட்டப்பணி ஆய்வுரை மட்டும் மீதமிருந்தது. அவன் முதன் முதலாய்ப் பெரியம்மா என்று அவளை அழைத்தது அப்போது தான்.

"எண்ணங் பெரிம்மா ...", கண்ணன் தொலைபேசியில்.
"நல்லா இருக்கியா கண்ணா?", மறுமுனையில் பெரியம்மா.
"நல்லா இருக்கங் பெரிம்மா"
"எக்சாம்ஸ் எல்லாம் நல்லா பண்ணி இருக்கியா?"
"நல்லா பண்ணீருக்கேங் பெரிம்மா. உங்களுக்கு ஒடம்புக்கு பரவால்லயாங்?"
"ம்ம் .. எனக்கு பரவால்லையா இருக்குது. கொஞ்சம் முன்னாடியே கண்டுபிடிசிருந்தா, இன்னும் ஈசியா ட்ரீட் பண்ணி இருக்கலாம்னு சொல்றாங்க. ஆனா இப்போ கூட நாட் டூ லேட்."
"ஆமாங் பெரிம்மா. மிட்-பார்டீஸ்ல இருக்கற எல்லாரும் வருஷம் ஒரு தடவ செக்-அப் பண்ணிக்கறது நல்லதுன்னு சொல்றாங்க."
"அப்பறம், நீ எப்போ ஊருக்கு வர்ற?"
"இன்னும் ப்ராஜெக்ட் வைவா இருக்குங் பெரிம்மா. மே டென்த் முடிஞ்சதுக்கப்பறம் வர்றனுங் பெரிம்மா. நீங்க எப்போ சென்னை வர்றீங்?"
"நானும் பெரிப்பாவும் பதிமூனாந் தேதி வர்றோம்."
"அம்மா சொன்னாங் பெரிம்மா, வீடு ஒன்னு பாக்க சொல்லி."
"ஆமா கண்ணா. ஒரு மூணு மாசம் மட்டும் தங்கற மாதிரி இருந்த போதும். டைம் இருந்தாப் போய்ப் பாரு."
"செரிங் பெரிம்மா.. இந்த வீக்எண்டு போய்ப் பாக்கறங் பெரிம்மா."

கண்ணனின் தாய் ஏற்கனவே சொல்லி இருந்தாள், சிகிச்சைக்காகச் சென்னை வரும் அவன் பெரியம்மாவிற்கு சிறியதாக ஒரு வீடு பார்க்கச் சொல்லி. அவள் சிகிச்சைக்காக வரும் அடையாற்றுப் புற்றுநோய் சிகிச்சை மையம் இருந்தது கண்ணனின் கல்லூரி அருகில்தான். அந்தப் பகுதியிலேயே வீடு பார்க்கப் போனான் அந்த வார இறுதியில்.

கேட்கப் போன இடத்திலெல்லாம், "சீக்காளிங்களுக்கெல்லாம் வீடு தரமாட்டோம்" என்று மறுத்து விட்டார்கள். அங்கே ஓரிடத்தில், புற்றுநோய் சிகிச்சைக்காக வருபவர்களுக்கென மிகச்சிறிய வீடுகள் மாத வாடகைக்கு விடுவார்கள் எனக் கேள்விப்பட்டான்.

"பெரிம்மா .. கேக்கற எடத்துல எல்லாம் மூணு மாசம்னா, வாடகைக்கு விடமாட்டோம்னு சொல்றாங் பெரிம்மா", சமாளித்தான் கண்ணன்.
"செரி பரவால்ல கண்ணா. அங்க கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு வர்ரவங்களுக்கு விட்றதுக்குனே சின்ன ரூம்ஸ் இருக்காமே. அங்க கேட்டுப்பாரு", பெரியம்மா சொன்னாள்.

எப்படிச் சொல்வதென்று இருந்த கண்ணனுக்கு இப்போதுதான் உயிர்வந்தது. அங்கேயே வீடுபார்த்து விட்டு, முன்பணம் எல்லாம் கொடுத்து விட்டான் கண்ணன்.

சிகிச்சைக்காக வந்திருந்த அவன் பெரியம்மாவை அந்த வீட்டில் அமர்த்துவதற்காக அவன் கல்லூரி வேலை எல்லாம் முடிந்தபின் நான்கு நாட்கள் அங்கேயே இருந்தான். பெரியப்பாவும் பெரியம்மாவும் வந்தபின், அவர்களைப் குடியமர்த்தி, அவர்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவன் பெரியப்பாவிற்கு அருகிலுள்ள கடைகளையெல்லாம் காட்டிவிட்டுப் பின் ஊருக்குக் கிளம்பினான்.

--------

மூன்று மாதங்கள் சிகிச்சை. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கதிர்வீச்சு சிகிச்சையும் (radiation) தொடர்ந்து கீமோத்தெராப்பி (chemotherapy) எனும் வேதிப்பொருள் கொண்டு செய்யும் சிகிச்சையும் செய்ய வேண்டும். இடைப்பட்ட நாட்களில் ஊருக்கு வருவாள் பெரியம்மா. கதிர்வீச்சு சிகிச்சையினால் உடலில் ஏற்படும் வெப்பம் அது முடிந்து நான்கு நாட்கள் வரை அவளைப் படாத பாடு படுத்திவிடும். உண்பதெல்லாம் வாந்தியாவதும், உடல் சோர்வாகவே இருப்பதும் பார்க்கப் பாவமாக இருக்கும். அதன் பின் பத்துநாட்கள் நன்றாக இருப்பாள். அப்போதுதான் பார்க்க வருபவர்களிடம் வாய் கொடுத்துப் பேசுவாள்.

"பெரிம்மா .. கவலப்படாதீங் பெரிம்மா. இந்த காலத்துல இதெல்லாம் ரொம்ப காமன். மெடிசின்ஸ் எல்லாம் ரொம்ப இம்ப்ரூவ் ஆயிருச்சு. சீக்கரம் நல்லாயிரும்", ஏதோ பெரிய மனிதன் போல் ஆறுதல் கூறினான் கண்ணன்.
"ஹ ஹ ..", மெல்லச் சிரித்தாள் பெரியம்மா. "ஆப்பிள் சாப்பிடு கண்ணா", மேஜை மேல் இருந்த ஆப்பிளை அரிந்து கண்ணனுக்குக் கொடுத்தாள்.

--------

மூன்று மாதங்கள் கழிந்தன..
கண்ணனும் அப்போது வேலைக்குச் சேர்ந்திருந்தான். பெரியம்மாவும் நலம் பெற்றிருந்தாள் - இல்லை, நலம் பெற்றவள் போல் தோற்றம் பெற்றிருந்தாள்.

ஓராண்டு கழிந்தது..
பெரியம்மா முழுவதுமாய் நலம் பெற்றுவிட்டாள். அவளுக்குப் புற்றுநோய் இருந்த அறிகுறியே இல்லாததுபோல் மாறிவிட்டது. அப்போதுதான் ஒருநாள்,

"கடைவீதில இருந்தப்போ என்னமோ முதுகுல சுரீர்னு வலிச்சுது. என்னனு தெரியல. இதுவரைக்கும் பேக்பெயின் வந்ததே இல்ல", பெரியம்மா சொன்னாள்.
"வயசு ஆனா வரத்தான் செய்யும். கொஞ்சம் அலையறத கம்மி பண்ணிக்கோங்க", அவளது பெரிய மகள் அல்லி. அவள்தான் ஏதாவது ஒன்றென்றால், பெரியம்மாவை அருகிலிருந்து பார்த்துகொள்வாள். 

இப்படி ஏதோ சாதாரணமான இடுப்புவலி என்றுதான் முதலில் நினைத்திருந்தார்கள். மூன்று மாதங்கள் கழிந்த பின்னர்தான் தெரியவந்தது புற்றுநோய் எலும்புகளிலும் பரவியிருந்தது. இந்த முறை கோயம்புத்தூரிலேயே சிகிச்சை அளித்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.

மீண்டும் மூன்று மாதங்கள் சிகிச்சையில் ஓடின. நலம் பெற்றிருந்தாள் பெரியம்மா.

இம்முறை சிகிச்சை நடக்கும்போது மகள் அல்லி பெரியம்மா வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டாள். அவள் அங்கேயே தங்க ஆரம்பித்தது, பெரியம்மாவிற்குப் பெரிய ஆதரவாக இருந்தது.

--------

சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் ஓடின. கண்ணன் பெங்களூரில் வேலையில் இருந்தான். கண்ணன் ஊருக்குப் போகும்போதெல்லாம் தன் பெரியம்மாவைக் காணச் செல்வான். இப்போதெல்லாம் உடல் நலத்தில் பெரிதும் குறை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

நல்ல காய்கறிகள், பழங்கள், பருப்பு, அளவான புலால் என சத்தான சமச்சீர் உணவு உண்டு வந்தாள் பெரியம்மா. காய்கறிகள், பழங்கள், கீரைகள் நிறைந்த உணவு புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இவற்றில் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் (anti-oxidants) மிகுந்து காணப்படுகின்றன. இவை உடலில் உள்ள உயிரணுக்களில் உயிர்வளியேற்றத்தைத் (oxidation) குறைக்கின்றன. உணவு, உடற்பயிற்சி, வீட்டு வேலை என்று அனைத்திலும் சீரான ஈடுபாட்டுடன் இருந்து வந்தாள் பெரியம்மா.

அன்று ஒருநாள் வார இறுதியில் ஊருக்குச்சென்ற போது அவளைக் காணச் சென்றிருந்தான்.
"வா கண்ணா", வெளியே நடந்து கொண்டிருந்த பெரியம்மா கண்ணன் வருவதைக் கண்டு வீட்டுக்குள் அழைத்தாள், "வாக்கிங் போயிட்டு இருந்தேன்."
"நல்லா இருக்கீங்களா பெரிம்மா?", கண்ணன் விசாரித்தான்.
"நல்லா இருக்கேன்."
"பெரிப்பாவ காணோம்?"
"பால் வாங்கீட்டு வரப் போனாங்க. வந்துருவாங்க. டெய்லியும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு அது பெரிப்ப டியூட்டி. உள்ள வா கண்ணா...", வாசலில் இருந்து கண்ணனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
"அம்மா வரலையா?", பெரியம்மா.
"இல்லீங் பெரிம்மா. அம்மா ஏதோ பங்ஷன் இருக்குனு அங்க போய்ட்டாங்க."

அவனை அங்கே உட்கார வைத்துவிட்டுப் பூஸ்ட் கலக்கிக் கொண்டுவந்தாள். கண்ணனும் குடித்துக் கொண்டே பேசினான்.
"இப்போ எல்லாம் உடம்புக்குப் பரவால்லயாங் பெரிம்மா?"
"ஒன்னும் பிரச்சனை இல்ல. டிரீட்மென்ட் முடிஞ்சதுக்கு அப்பறம் நல்லா இருக்கு. உனக்கு வேலை எல்லாம் நல்லாப் போகுதா?"
"நல்லா போகுதுங் பெரிம்மா. அக்காவ காணோம்?"
"அக்கா வேலைக்கு போயிருக்கா", கொஞ்சம் கோபமான குரலில்.
"ஓ ஓகே .."
"இங்க இருக்கறது பத்தாதுன்னு வேலைக்கு வேற போய் சம்பாரிக்கரா. வீட்டோட இருன்னு சொன்னா கேட்கமாடேங்கரா."
"அக்கா டீச்சிங் ப்ரோபெசன ஒரு சர்வீஸ் மாதிரி செஞ்சுட்டு இருக்காங்க. ஸ்கூலுக்கு தானே போறாங்க. போயிட்டு போறாங்க", அல்லி வேலைக்குச் செல்வதை ஆதரித்துப் பேசினான் கண்ணன்.
பெரியம்மா ஒன்றும் சொல்லவில்லை.

சிறிது நேரம் கழித்து அல்லி வந்தவுடன், மீண்டும் கண்ணனுடன் பேசத் தொடங்கினாள்.
ஏதோ கேள்வி கேட்டாள், "மேரி குயூரி கான்செர் வந்துதான செத்துப் போனாங்க?"
கண்ணன் ஏதோ அவன் அறிவை அவள் சோதிக்கக் கேட்கிறாள் என்று, "தேரீலயேங் பெரிம்மா.."
"மேரி குயூரி தான ரேடியேசன கண்டுபிடிச்சது?", கேள்வி கேட்டாள் பெரியம்மா.
"ஆமாங் பெரிம்மா. அவங்களும் அவங்க ஹஸ்பன்டு பியரி குயூரியும் தான் ரேடியம் ரேடியேசன் எல்லாத்தையும் கண்டுபிடிச்சாங்க", கண்ணன் தன் பொது அறிவை எல்லாம் பெருமையுடன் வெளிக்காட்டினான்.
"அவங்க எப்படி செத்தாங்கனு தெரியுமா உனக்கு?", மீண்டும் கண்ணனின் அறிவை சோதித்தாள் பெரியம்மா.
"ஏதோ ரெடியேசன் எபெக்ட்ல தான் எறந்தாங்க."
"அப்பிடீன்னு ரேடியேசன் குடுத்தவங்கள எப்பிடி பாத்துக்கணும்? நல்ல பாத்துக்கணும்."
"..."
"உங்க அக்காவுக்கு இதெல்லாம் எங்க புரியுது. வேல வேலன்னு சுத்தவே நேரம் செரியா இருக்குது அவளுக்கு."
இப்போது தான் கண்ணனுக்கு அவளது பேச்சின் நோக்கம் புரிந்தது. கண்ணன் சத்தமின்றி வாயடைத்து அமர்ந்திருந்தான்.
அதற்குள் அல்லி குறுக்கிட்டாள், "அம்மா .. சாப்பிடுங்க" என்று சொல்லி ஒரு தட்டில் உணவை எடுத்து வைத்தாள். அல்லியைத் திட்டிக் கொண்டே அந்தத் தட்டில் இருந்த மூன்று இட்லிகளை முடித்தாள் பெரியம்மா.

எட்டு மணிக்கெல்லாம் தூங்கச் சென்று விடுவாள் அவள். அவள் தூங்கச் சென்றதும், அல்லியும் கண்ணனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
"இப்போவெல்லாம் ரொம்ப இன்செக்யூரா பீல் பண்றாங்கடா கண்ணா. என்ன எப்போ பாத்தாலும் திட்டிட்டே இருக்காங்க. என்ன மட்டும் தான்."
"பாவம், ட்ரீட்மென்ட்ல ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. அதான் கா."
"ஆமா. ஏதோ ப்ரைன்ல கேன்சர் வந்த மாதிரி, இப்பிடித்தான் பேசிட்டே இருக்காங்க."
"ம்ம் .. பாவம்"
"நம்ம கிட்ட எல்லாம் சொன்னாப் பரவால்ல. சங்கர் கிட்ட போய் சொல்லி இருக்காங்க, உங்க அம்மா என்னப் பாத்துக்கறதே இல்லன்னு. அவன் சின்னப்  பையன் பாவம்", தன் மகனிடம் சொன்னதைக் கண்ணனிடம் குறைகூறிக் கொண்டிருந்தாள் அல்லி.

--------

இன்னும் சில மாதங்கள் ஓடியிருந்தன. கண்ணனுக்கு வெளிநாட்டில் வேலை மாற்றுதல் ஆகியிருந்தது. இன்னும் இரண்டே வாரங்களில் கிளம்பப் போகிறான்.

ஊரில் வெயில் அதிகம் என்பதால், சின்ன மகள் கயலின் வீட்டில் சிலநாட்கள் தங்கி வரலாம் என பெங்களூர் வந்திருந்தாள் பெரியம்மா. கயல் காலை எட்டு மணிக்கெல்லாம் வேலைக்குச் சென்றுவிடுவாள். அதன் பின்னர், வீட்டில் வேலை செய்யும் லட்சுமிதான் பெரியம்மாவைப் பார்த்துக் கொள்வாள். கண்ணன் வேலைநாள் ஒன்றின் மதிய வேளையில் பெரியம்மாவைக் காணக் கயலின் வீட்டிற்குச் சென்றிருந்தான். 

"அம்மா தூங்கிட்டு இருக்காங்க. பத்து மணிக்கு சாப்டுட்டு ஒரு சின்ன தூக்கம் போடுவாங்க. அப்பறம் ஒரு பன்னெண்டு மணிக்கு லன்ச்", லட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெரியம்மா எழுந்து வந்தாள். அவள் முன்பு போல் இல்லை. தள்ளாடிய நடை.
"வா கண்ணா..", அமைதியான குரலில் கண்ணனை அழைத்தாள், "சாப்டயா?", விசாரித்தாள்.
"இல்லீங் பெரிம்மா. இனிமேல் தான்."
"லட்சுமீ.. கண்ணனுக்கு சாப்பாடு போடு", பெரியம்மா ஏவல் புரிந்தாள்.
"நீங்க சாப்பிடுங்க அக்கா. கண்ணனுக்கு புளிக்குழம்பு ரெடி ஆயிட்டு இருக்கு", லட்சுமி.

தட்டில் போட்டு வைத்த சோற்றில் சிறிது சாம்பார் விட்டுப் பிசைய முயற்சித்தாள் பெரியம்மா.
"நான் பெசஞ்சு வெக்கறேன். இருங்கக்கா", லட்சுமி பிசைந்து வைத்தாள்.
அமைதியாய் சாப்பிடத் தொடங்கினாள் பெரியம்மா. அவளால் சோற்றினை அள்ள முடியவில்லை; கை உதறியது.
அதைக் கண்ட லட்சுமி, "நான் ஊட்டி விடறேன். இருங்கக்கா", என்று சோற்றினை ஊட்டி விட்டாள். பாதி முடித்த நிலையில், போதும் என்று கை அசைத்தாள் பெரியம்மா.
"இருங்கக்கா. இன்னும் ஒரே ஒரு வாய். நல்ல சாப்பிடுறதே இல்ல. சாப்பிட்டா தானே ஒடம்புல தெம்பு இருக்கும்", ஒரு குழந்தைக்கு ஊட்டுவது போல் ஊட்டிவிட்டாள் லட்சுமி.

கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.
'நல்லாத்தானே இருந்தாங்க .. என்ன ஆச்சு? திரும்பவும் எதாவது எடத்துல பரவிருச்சா?', அவன் மனதுக்குள் ஏதோ எண்ணங்கள் ஓடின.

--------

கண்ணன் வெளிநாடு கிளம்புமுன் நான்கு நாட்கள் ஊருக்குச் சென்றிருந்தான். அப்போது பெரியம்மா திடீரென்று மயங்கிவிட்டாள் என்று பெங்களூரில் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து இருந்தனர். இப்போது தான் தெரிந்தது அவளது புற்றுநோய் அவளது மூளையை பாதித்துள்ளது என்பது. எல்லோருக்கும் அதிர்ச்சி.

புற்றுநோய் உயிரணுக்கள் தம் இருப்பிடத்திலிருந்து அவற்றின் ஒத்த இருப்பிடங்களில் பரவும் தன்மையனவாம். மார்பகத்தில் தோன்றும் புற்றுநோய் உயிரணுக்கள், மார்பகத்தைப் போலவே சுண்ணாம்புச்சத்து மிகுந்த எலும்புகளுக்குப் பரவுகின்றன. எலும்புகளும் மூளையும் பிறப்பால் ஒரே செல்லில் இருந்து தொன்றுவனவாம். அந்தத் தொடர்பினால் அடுத்து மூளையைத் தாக்குகின்றன.

மீண்டும் சிகிச்சை செய்யலாம் என்று கேட்டதற்கு, மருத்துவர்கள் மூலையில் அளவுக்கு மீறிப் பரவிவிட்டது என்று கைவிட்டுவிட்டார்கள், "இட்ஸ் டூ லேட். இப்போ ஒன்னும் செய்ய முடியாது. கொஞ்சம் முன்னாடியே டயக்னோஸ் பண்ணி இருந்த, எதாவது ட்ரீட்மென்ட் குடுத்திருக்கலாம்."

ஒரே நாளில் மீண்டும் அவள் நினைவு திரும்பி எழுந்து நடக்கத் தொடங்கியதால், பெங்களூரில் இருந்து ஊருக்குக் கிளம்பினாள் பெரியம்மா.

ஊருக்கு வந்த பின்னர், அவளைக் காணச் சென்றிருந்தான் கண்ணன்.
"வா கண்ணா. நல்ல இருக்கியா?"
"நல்ல இருக்கனுங் பெரிம்மா."
"எப்போ யூ.எஸ். கிளம்பற?"
"இன்னும் போர் டேஸ்ல கிளம்பறங் பெரிம்மா."
"எல்லாம் பேக் பண்ணியாச்சா?"
"பண்ணியாச்சுங் பெரிம்மா."
நன்றாகப் பேசிக்கொண்டிருந்தாள் பெரியம்மா. வெளியே சென்றிருந்த பெரியப்பா உள்ளே வந்தார்.
"வா கண்ணா. என்ன யூ.எஸ். கிளம்ப ரெடி ஆயாச்சா?"
"ஆச்சுங் பெரிப்பா", புன்னகைத்தான் கண்ணன்.
"சேரி .. அப்பறம், எல்லாரையும் பாத்துட்டு சொல்லிட்டு வந்துட்டயா?"
"ஆச்சுங் பெரிப்பா."
"பக்கத்துக்கு ஊர்ல ஒரு எழவு. அதுக்கு போய்ப் பாத்தியா?"
கண்ணன் வாயைத் திறப்பதற்கு முன் பெரியம்மா குறுக்கிட்டாள், "வாய மூடுங்க. ஊருக்கு போற பையன் கிட்ட எழவு கெழவுன்னு பேசிக்கிட்டு. நான் செத்தா தான் எழவு. கம்முனு இருங்க."
அவள் திட்டியதில், கண்ணனும் வாயடைத்துப் போனான்.

--------

கண்ணன் வெளிநாடு வந்து சேர்ந்துவிட்டான். ஒரு வாரம் ஓடிவிட்டது. ஒருநாள் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடன், அவன் அலைப்பேசி அழைத்தது - கண்ணனின் தாய்.
"ஹலோ .. சொல்லுங் மா", கண்ணன் அழைப்பை எடுத்தான்.
"...", அழுதாள் அம்மா.
"என்னம்மா ஆச்சு?"
"பெரிம்மா செதுட்டாங்கடா கண்ணா", அழுதுகொண்டே சொன்னால்.
"...", கண்ணன் வாயடைத்துப் போனான்.
"நேத்து மறுபடியும் மயக்கம் போட்டுட்டாங்கன்னு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினோம். காலைல அக்கா ரெண்டுபேரும் குளிச்சுட்டு வர்றேன்னு வீட்டுக்குப் போனாங்க. நான் தான் கூட இருந்தேன்."
"..."
"கயல் எங்கனு கேட்டாங்க. நான் பதில் சொல்றதுக்குள்ள தல சாஞ்சுருச்சு. அவ்ளோதான். அப்பிடியே போய்ட்டாங்கடா", இன்னும் அழுதுகொண்டுதான் இருந்தாள்.

அவளுக்கு சமாதானம் சொல்ல வார்த்தைகளைக் கொணர்வதற்குக் கண்ணனால் இயலவில்லை. கண்ணீர்த் துளிகள் இரண்டு மட்டும் மெல்லக் கசிந்தன அவன் கண்களில். பெரியம்மா மழை பெய்து வேகமாய்க் களைந்த மேகம் போல் களைந்துவிட்டாள். கண்ணனின் நெஞ்சம் மழைவிட்ட வானம் போல் வெறுமையாய் மாறியது சிறிது நேரத்தில்.

Friday, November 19, 2010

தளிர்

2


தீபாவளி என்றால், அவன் பள்ளியில் குறைந்தது மூன்று நாட்களாவது விடுப்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குக் கண்ணன் வீட்டில், அவன் அம்மாயி வீட்டுக்குப் போவதுதான் வழக்கம். அவன் அம்மாயி தாத்தாவிற்கு இரண்டு மகள்கள் உண்டு. கண்ணனுக்கு மாமன் இருந்தார். அவர் கண்ணனுக்கு இரண்டு வயது இருந்த போதே இறந்துவிட்டார். அவன் அப்பா வீட்டிலோ, கண்ணனின் இரண்டு அத்தைகள், அத்தை பிள்ளைகள் என ஒரு பட்டாளமே இருக்கும். இந்த தீபாவளிக்கு ஏனோ கண்ணனுக்கு அவன் ஆத்தா வீட்டிற்குச் செல்ல வேண்டுமெனத் தோன்றிவிட்டது. சொன்னால் கேட்கவா போகிறான்.

"நோம்பீனா, அம்மாயி வீட்டுக்குத் தான் போகணும்", சொல்லிப் பார்த்தாள் அம்மா.
"அதெல்லாம் முடியாது. நான் ஆத்தா வீட்டுக்குப் போகணும்", அடம் பிடித்தான்.

தீபாவளிக்கு முதல் நாள், அவன் அப்பா, அவனை புல்லெட் வண்டியில் ஏற்றி அம்மாயி வீட்டிலிருந்து தன் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார். இரண்டு ஊர்களும் நான்கு மைல் தொலைவிற்குள்தான். அங்கு ஏதோ அவன் தன் அத்தை மக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மறுநாள் தீபாவளியன்று, காலையில் ஆறு மணிக்கெல்லாம் அங்கிருந்து திரும்ப அம்மாயி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டார். கண்ணனுக்கென்று அவன் அம்மா புதுத்துணி வாங்கி வைத்திருந்தாள். அது ஏனோ கண்ணுக்குப் பிடிக்கவில்லை. அந்தத் துணியை உடுத்திக் கொள்ளமாட்டேன் என்று அடம். என்றுமில்லாமல், அவன் அப்பாவிற்கு அவன்மேல் கோபம் வந்தது. பாவம் அந்த குழந்தை.. வெறுமேனியுடன் நின்றிருந்த கண்ணனின் மேல் ஒரு தோல் பெல்ட்டினால் விழுந்தது சுரீர் சுரீரென்று.. கதறிக்கொண்டு ஓடிச் சமயலறையிலிருந்த அவன் அம்மாயியின் கால்களைக் கட்டிக்கொண்டான். கண்ணனுக்கு அன்று அவன் அப்பாவின் செயல் ஒரே விந்தையாயிருந்தது.

அந்தத் தீபாவளி முடிந்து ஐந்தாறு வாரங்கள் இருக்கும். அவர்களெல்லாம் ஊருக்குச் சென்றிருந்தபோது, ஈரோட்டிலில் அவர்களிருந்த வீட்டில் களவு போய்விட்டது. இரண்டு லட்சம் பெறுமானமுள்ள நகைகள், வி.சி.டி பிளேயர் இன்னும் பல பொருட்கள். போலீஸ் வந்து போய்க்கொண்டிருந்ததால், சிறுவன் பயப்படுவான் என்று, கண்ணனை அவன் பெரியப்பா தன் வீட்டிற்குக் கூட்டிப்போய்விட்டார். வீட்டில் களவுபோனதைப் பற்றிக் கண்ணனுக்குக் கவலையே இல்லை. அவன் இளந்தளிராயிற்றே!

பின் ஒரு மாதத்தில், அவன் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. ஒரே இருமல். அவன் அம்மா எவ்வளவு சொல்லியும், அவர் மருத்துவரைப் பார்க்க மறுத்துவிட்டார். ஒருநாள் இவர்களைக் காண வந்திருந்த கண்ணனின் அத்தை, தன் தனையன் நிலைகண்டு, அவரை வலுக்கட்டாயமாய்க் கோயம்புத்தூரிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட்டார். கண்ணன் அப்போது ஒன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான். அவன் அந்த ஆண்டு அரையாண்டுத் தேர்வே எழுதவில்லை. கோயம்புத்தூரிலுள்ள அவன் அத்தை வீட்டிலேயே இருந்தான். அவன் அம்மா, அம்மாயி, ஆத்தா என எல்லாரும் அவர் இருந்த ஆஸ்பத்திரியிலேயே தான் இருந்தார்கள். கண்ணனைத் தினமும் காலையில் அவன் அத்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுவிடுவாள். இப்படித்தான் ஒரு மாதமாகக் கண்ணனின் தினசரி அலுவல்கள்.

அன்று மருத்துவமனை வந்த அவனை அவன் ஆத்தா அழைத்தாள்.
"தம்பீ.."
"என்னங்காத்தா?"
"வா சாமீ.. உங்கொப்பனப் போய்ப் பாத்துட்டு வந்தரலாம்."
"ஐயே .. நான் வரமாட்டேன்", சிணுங்கத் தொடங்கினான், "பயமா இருக்கும்."
அவன் இங்கு வந்ததிலிருந்து அந்த ஐ.சி.யு-வினுள் ஒரே முறைதான் சென்றுள்ளான். மற்றபடி, வெளியே உள்ள பூங்காவிலோ, கேண்டீனிலோதான் இருப்பான். உள்ளே போவதென்றால், ஒரே பயம். அதுவும் அவன் அப்பாவிற்குப் பொறுத்தியிருந்த ஆக்சிஜன் டியூபு, அங்கு இருக்கும் சிறு பல்புகள் கொண்ட இயந்திரம், இவற்றைப் பார்த்தால் அவ்வளவுதான். பாவம், அவருக்கும் அவர் ஆசை மகனைப் பார்க்கவேண்டும் போல் இருந்திருக்கிறது. இந்த கிழவியிடம் சொல்லியிருக்கிறார்.
"நான் இருக்கறேனல்லோ. வா சாமீ.. உள்ள போய்ப் பாத்துட்டு வந்தரலாம்."
"நா வர்ல .."
எப்படியோ அவனை உள்ளே கூட்டிச் சென்றுவிட்டாள் அவள். உள்ளே, தூங்கிக் கொண்டிருந்த தன் மகனிடம், "டேய்.. டேய்.. இங்க பார்ரா" மெல்ல அழைத்தாள்.
கண்ணின் அப்பா விழித்து, "தம்பீ.." என்றார் மெல்லிய குரலில்.
கண்ணனுக்கு என்ன செய்வதென்றே தெரிவில்லை.
"ப்ப்ப்போலாம் .." சிணுங்கினான்.
"சேரி .. பயப்படறான்.. இரு, நாங் கொண்டோய் வெளிய உட்டுட்டு வந்தர்றேன்."

அவன் அப்பாவிற்கு ஒன்றுமில்லை. சிறு வயதிலிருந்தே இதயம் கொஞ்சம் வலிமையிழந்திருந்தது. ஆனால் சிறுவயது முதலே, அவர்தான் அந்த ஊரின் குறும்புக்காரச் சுட்டிகளில் முக்கியமானவராய் இருந்திருக்கிறார். இப்போது குடியினால், கல்லீரல் பழுதடைந்துவிட்டது. கூடவே நுரையீரலில் கோளாறு - காசநோயினைப் போல. மாரடைப்பும் வேறு. அவ்வளவுதான்.

அன்று மாலை ஒரு ஐந்து மணியிருக்கும். கண்ணன் காரின் பின் சீட்டில் அவன் அம்மாயியின் மடியிலமர்ந்திருந்தான். அருகில் அவன் அம்மா. கார் கிளம்பியது. கண்ணன் அவன் தாயிடம் கேட்டான், "அவுரு எங்கம்மா?".
"..", மௌனம்.
அவளுக்கு புரியவில்லையோ என்று நினைத்துக்கொண்டு, தன் கேள்வியினைத் தெளிவாகக் கேட்டான்.
"அப்பா எங்கம்மா?"
மௌனம்.
அப்படியே தூங்கிவிட்டான்.

கார் அவன் அப்பாவின் சொந்த ஊருக்குள் நுழைந்தது. அவன் ஆத்தா வீடு என்று ஆசையுடன் அழைக்கும் அந்த வீட்டின் கேட்டினுள் நுழைந்ததும், காரில் இருந்த அனைவரும் அழத் தொடங்கினார்கள். கண்ணணுக்கு ஒன்றுமே புரியவில்லை.
"ஏம்மா அழுவறீங்க?"
அழுகை தொடர்ந்தது.

அதன்பின் அந்த மச்சு வீட்டின் திண்ணைகளிலும், தொட்டியிலும், சமயலறையிலும் அலையத் தொடங்கினான். ஒரு எட்டு மணியிருக்கும். கண்ணன், ஆசாரத்தின் எதிர்ப்புறம் இருக்கும் திண்ணையருகிலுள்ள, அவன் பெரியப்பா அறையின் கதவின் நிலவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். அப்போது சைரன் போட்ட ஆம்புலன்சில் இருந்து ஒரு நீளமான துணிக்கட்டினைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். எதிரில் இருந்த ஆசாரத்தில் அழுகை வலுத்தது. நடுவில் இருந்த தொட்டியில், அந்த ஊரின் வண்ணான், நாவிதன், பறையன், இன்னபிற தொழிலாளி வீட்டுப் பெண்களெல்லாம் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது தான், ஆம்புலன்சில் வந்திருந்த அவனது அத்தை மகன், அந்தச் சேதியைச் சொன்னான். அவனும் சிறுவன்தான். ஆனால், கண்ணனைவிட ஒரு இரண்டு ஆண்டுகள் மூத்தவன்.
"கண்ணா.."
"என்னங் மச்.." இப்படித்தான், முழுதாக மச்சான் என்று கூப்பிடாமல் விழுங்கி விடுவான்.
"அங்க தூக்கிட்டு போறது உங்க அப்பாடா.."
கண்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மெல்ல ஒரு புன்னகையை உதிர்த்தான்.
"செத்துப் போய்ட்டாங்கடா..", மச்சான்.
"ஓஹோ"
கண்ணன் மீண்டும் வீட்டினைச் சுற்றிவரத் தொடங்கினான். பிணம் வைத்திருந்த ஆசாரத்தின் பக்கம் அவன் போகவே இல்லை. ஆனால், கண்ணனுக்கு மனதினுள் ஒரு சிறு அச்சம். எங்கோ உடன்கட்டை ஏறுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான் போலும். அதனால்தான்! அப்பா இல்லையென்றால், இனி அப்பாவின் தாயான ஆத்தா, அப்புறம் அவன் அத்தைகள், அத்தை மக்கள், இவர்களை எல்லாம் பார்க்க முடியாதோ என்ற ஆதங்கமும் கூட. உள்ளே உள்ள அச்சத்தைக் காட்டி கொள்ளாதவனாய் ஓடித்திரிந்திருந்தான்.

காலையில் சடங்குகளெல்லாம் முடிந்தபிறகு, பிணத்தை எடுக்க (எரிக்க) ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்றார்கள். தெருமுனையுடன் பெண்களெல்லாம் அழுகையுடன் நின்றுவிட்டார்கள். கண்ணனின் மனதில் அச்சம் சற்றே ஓய்ந்தது. கண்ணனை அவன் பெரியப்பாதான் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். கூடவே மச்சானும், தங்கையான பெரியப்பா மகளும். நாவிதன்தான் கண்ணனையும், தண்ணீர்ப் பானையையும் தூக்கிக்கொண்டு பிணத்தைச் சுற்றி வந்தான். முகத்தை மூடுமுன், அங்கிருந்த பெரியவர்களெல்லாம், "அப்பா மொகத்தப் பாத்துக்க சாமி.." என்றார்கள். அவன் தன் தந்தையைக் கடைசியாகப் பார்க்கிறோமே என்ற கவலையே இல்லாதவனாய், சற்றே அந்தப்பக்கம் பிணத்தை நோக்கி ஒரு பார்வை பார்த்தான்.

கொல்லி வைத்த பின்னர், "மொட்டை அடிச்சுக்கறயா?", பெரியப்பா கேட்டார்.
"ம்ம்ஹூம்ம் .. மாட்டேன்", என்றான்.
குழந்தையை யாரும் கட்டாயப் படுத்தவில்லை. ஏதோ சாங்கியம் என்று வேறு மூன்று பேர் மொட்டை அடித்துக் கொண்டார்கள்.

இருபத்தொரு நாட்கள் அங்கேயே ஆத்தாவுடன் இருந்துவிட்டான். "தினமும் இரண்டுவேளை சூடம் பற்றி சாமிகும்படணும்" என்று. அதன்பின், மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான், அழுகை ஏதுமில்லாமல். காலையில் அழுவதுதான் எல்.கே.ஜி-யுடன் முடிந்துவிட்டதே!
பள்ளியில், சரண்யா கேட்டாள், "கண்ணா, உங்க அப்பா செத்துப் போய்ட்டாங்களாமே?"
எங்கோ கண்ட நிகழ்ச்சியைப் பேசுவதைப் போல, "ஆமா.. ஹார்ட் அட்டேக்..", என்றான் புன்னகையுடன். அதற்கு என்ன தெரியும், இளந்தளிராயிற்றே!

Monday, November 15, 2010

சின்னக் கண்ணன்

1


கண்கள் .. இவை ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெற்ற வரங்களாம். இவை கருப்பு வெள்ளையாயினும், எண்ணிலடங்கா நிறங்களைக் காணச்செய்யும் தன்மையன. மூளைக்கு எல்லா நிகழ்வுகளையும் படம் பிடித்துக் கொடுக்கும் கேமராக்கள் இவை. இப்படித் தான் கண்ணனின் கண்களும் அவனுக்கு எண்ணற்ற அனுபவங்களையும் நிகழ்வுகளையும் படம் பிடித்துக் கொடுத்தன. தமிழகத்தின் ஒரு மூலையில் காவிரியாறு சமவெளிப் பகுதிகளைச் சற்றே எட்டிப் பார்க்கத் தொடங்கும் இடத்தில்தான் ஈரோடு என்ற சிறிய நகரம் உள்ளது. அந்நகரைச் சுற்றியுள்ள பல கிராமங்களைப் போல் தான் கண்ணனின் ஊரும். என்னதான் பிளசர் காரில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு, ஒரு வேலையாள் ஓட்டப் பெயர் சொன்ன இடத்தில் இறங்கிக் கொள்ளும் வசதி படைத்திருந்தாலும், ஏதோ காலத்தின் கட்டாயத்தில் பள்ளத்தில் விழுந்து வசதிகள் போய்விட்டால், நடந்தோ, நகரப் பேருந்திலோ செல்லும் துணிவும், சிக்கனமாகக் குடும்பம் நடத்தித் தங்கள் பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு செல்லும் விவரமும் நிறைந்தவர்கள் கவுண்டன்மார் வீட்டுப் பெண்கள். பொன்னிற்கு ஈடாக விலை போகும் மஞ்சள் நன்கு விளையும் நிலங்களை உடையவர்கள் கவுண்டன்மார்கள். அப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவன்தான் கண்ணன்.

'வீட்டுக்கு ஒரு பிள்ளை' என்ற கோட்பாடு பிரபலமாய் இருந்த அந்தக்காலத்தில்தான் கண்ணன் பிறந்தான். ஆம், அவன் ஒரே பிள்ளை. அவன் தந்தையும் தாயும், அவன் படிப்பிற்காக, அவன் சிறியவனாக இருந்த போதே ஈரோட்டிற்கு வந்து விட்டார்கள். அவன் அப்பாவிடம் செல்லம் அதிகம். அப்பாவின் நெஞ்சில் ஏறித்தான் இரவில் தூங்குவான். அவன் தாயோ அவ்வளவாகச் செல்லம் இல்லை. காலையில் பள்ளிக்குச் சென்றிருப்பான் கண்ணன்; அவனது அப்பாவிற்குக் திடீரென்று அவனைப் பார்க்க வேண்டும் என்றிருந்தால், உடனே ஒரு பொட்டலம் சாக்லேட் மிட்டாய் வாங்கிக்கொண்டு, தன் புல்லெட் வண்டியில் அவன் பள்ளிக்குக் கிளம்பிவிடுவார். அவ்வளவு பாசம் அவன்மேல். அவன் அப்பாவிற்குப் பெரிய வேலை எல்லாம் ஒன்றும் கிடையாது. தமது ஊரில் உள்ள பரம்பரை நிலத்தைப் பார்த்துக்கொள்வதுதான்.

கண்ணன் ஒன்றும் பெரிய சுட்டியல்ல. வகுப்பில் இருக்கும் இடம் தெரியாது. அவ்வளவு அமைதி. அவன் எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் போது காலையில் பள்ளிக்கூட வேனில் ஏற்றி அனுப்புவதற்குள் பெரும் பாடாகி விடும். அழுது அடம் பிடித்து ஊரைக் கூட்டிவிடுவான். இப்படித்தான் ஒரு நாள் அவன் அப்பா வழிப் பாட்டி அங்கு வந்திருந்தாள். அவளை 'ஆத்தா' என்று தான் இவன் அழைப்பான். கண்ணன் உறவுமுறை கொண்டு கூப்பிடும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருள் அந்தக் கிழவியும் ஒருத்தி. மற்றவர்களை எல்லாம் 'ஏனுங் ..' 'வாங் ..' 'போங் ..' .. அவ்வளவுதான். ஏதோ ஒரு கரிசனத்தில், அன்று கண்ணனைக் கிளப்பி அனுப்பும் பொறுப்பை அவள் ஏற்றுக் கொண்டாள்.
"தம்பீ .. ", அப்படித்தான் அவள் கண்ணனை அழைப்பாள்.
"என்னங் ஆத்தா?"
"சாப்படலாம் வா"
"எனக்கு வேணாம் .."
"சாமி சாமியல்லோ .. வேண்டாம்னு சொல்லக்கூடாது. சீக்கரமா சாப்டுட்டு ஸ்கூலுக்கு போக வேணும். அப்பறம், உங்கொப்பன் நான் வந்துதான் நீ சாப்பட மாட்டீங்கறேனு சொல்லுவான். சாப்புடு சாமி."
இப்படி எல்லாம் ஏதோ சொல்லிச் சாப்பிட வைத்துவிட்டாள். பள்ளி வேன் வந்து ஆரன் அடித்துக் கொண்டு இருந்தது. எப்போதும் போல் அழுது ஊரைக் கூட்டி விட்டான். அவனுக்குப் பள்ளிக்குப் போவதே பிடிக்காது. வீட்டில் இருக்கும் விளையாட்டுச் சாமான்களோடு, சிறு சிறு எலெக்ட்ரிக் ப்ளக், கூழாங்கல், சிறிய சதுரமான மரக் கட்டைகள் - இவற்றைக் கொண்டு கோயிலில் சாமி வைத்தோ, பஸ் ஒட்டியோ விளையாடுவான். அதை விட்டால், பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு சிறிது நேரம் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருப்பான். எல்.கே.ஜி படிக்கும் வரை, பள்ளியில் அடிக்கடி மதியம் சாப்பிடும்போது வாந்தி எடுத்து விடுவான்; அவன் பள்ளியில் மதிய உணவிற்குப் பின் எல்லாக் குழந்தைகளையும் உறங்க வைப்பது வழக்கம். அப்படி உறங்கும்போது சிறுநீரோ மலமோ கழித்து விடுவான். அந்தச் சிறுவனுக்குள் அப்படி என்னதான் அச்சம் உண்டானதோ தெரியவில்லை. பள்ளி என்றால், அவனுக்குக் குலையே நடுங்கிவிடும். அவனுக்குப் பள்ளியில் விளையாடுவதென்றால், ஏதோ ஒரு இனம் புரியாது அச்சம் வந்துவிடும். மற்ற குழந்தைகளெல்லாம் சருக்கலிலோ ஊஞ்சலிலோ விளையாடும்போது, இவன் மட்டும் தனியே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். மாலையில் வீட்டிற்கு வந்தால், அவன் அம்மா அவனை ஆசையாக வேனில் இருந்து எடுத்து அணைத்துக் கொண்டு வருவாள். பின்னர், துணி மாற்றிக்கொண்டு அவனது விளையாட்டுச் சாமான்களுக்கு உயிர் கொடுக்கத் தொடங்கிவிடுவான். வெயில் போன பின்பு, சைக்கிள். அவன் தந்தை ஊரில் விவசாய நிலங்களைப் பார்த்துக் கொள்வதற்காகக் காலையில் போனால், மலையில் ஐந்தாறு மணிக்குத்தான் திரும்புவார். வந்தபின், உணவு எல்லாம் முடித்துக் கொண்டு ஒரு எட்டு மணிவாக்கில் கண்ணனையும் அந்த புல்லெட் வண்டியில் முன்னே அமர்த்திக்கொண்டு வெளியே சென்றுவிடுவார். கண்ணன் அங்குள்ள ஆம்லெட் கடையில் முட்டை தின்றுகொண்டிருப்பான். அவரோ பக்கத்துக் காம்ப்ளசில் உள்ள வைன் ஷாப்பில் தேவையான அளவிற்கு ஏற்றிக்கொண்டு வருவார். அவனுக்கு எதற்கு அங்கு வருகிறோம் என்று கூடத் தெரியாது. முட்டை தின்பதில் மும்முரமாக இறங்கி விடுவான். இப்படித் தான் கண்ணனின் வாழ்க்கை ஓடியது.

வாரம் முடிந்து விட்டால், கண்ணனை அவன் அம்மாவின் அம்மா வீட்டிற்குக் கூட்டிப்போய் விடுவார்கள். அங்கு தான் சனி ஞாயிறுகளைக் கழிப்பான். அங்கு போய்விட்டால், வெகு செல்லம். அவன் அம்மாயி (அம்மாவின் அம்மா) அவன் கேட்டதெல்லாம் செய்து கொடுப்பாள். அவனும் "அம்மாயி அம்மாயி .." என்று அவள் பின்னேயே திரிவான். ஆனால், தனது தாத்தாவைக் கண்டால், அவனுக்கு ஏதோ ஒரு பயம். "தாத்தா" என்று ஒரு முறை கூட அழைத்தது கிடையாது. அங்கு வாசலில் மணல் கொட்டி வைத்திருப்பார்கள். அதில் விளையாடிக்கொண்டிருப்பான். அவன் தாத்தா காரில் வரும்போது, தெரு முனையில் ஆரன் அடிப்பதுண்டு. யாராவது கார் வருவது தெரியாமல் ரோட்டில் வந்து விடுவார்களே என்ற எச்சரிக்கையில்தான். அந்தச் சத்தம் கேட்டால், மணலில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணன், நொடியில் உள்ளே ஓடி விடுவான்.

ஊருக்குச் செல்லாத வார இறுதிகளில், ஞாயிற்றுக் கிழமைகளில், வீட்டில் அசைவம் சமைப்பது வழக்கம். அனால், கண்ணனின் தாய் அசைவம் சாப்பிட மாட்டாள். ஏன் .. தொடக்கூட மாட்டாள். அவன் அப்பாதான் கறியைக் கழுவிச் சட்டியில் போடுவார். அவன் அம்மா அதைக் கிளறி விட்டுத் தொடாமல் சமைப்பாள். ஆட்டுக்கறிக் கொழுப்பும், சூப்பு எலும்பினை (சூப்பு என்றால் குடிக்கும் சூப்பு அல்ல. ஆட்டுக் கால் எலும்பில் உள்ள சாற்றை உறிஞ்சி உண்பதால், அதனைச் சூப்பு என்கிறார்கள் இப்பகுதியில்) உறிஞ்சிச் சாப்பிடுவதும் கண்ணனுக்குப் பிடிக்கும். ஆட்டு மூளையும் விரும்பிச் சாப்பிடுவான். அவன் அம்மாயி வீட்டில் கிடாய்ப் பொங்கல் வைத்தால், அவனுக்காக ஆட்டின் மூளையைத் தனியாக எடுத்து வறுத்து வைப்பாள் லட்சுமி அக்காள். அங்கு தோட்டத்தில் வேலை செய்யும் பலருள் அவளும் ஒருத்தி.

இப்படித்தான், அவன் குழந்தைப் பருவம் ஓடியது. எந்தக் கவலையும் இல்லை அவனுக்கு. ஏதோ வாழ்க்கை என்பது தட்டிக் கொடுத்து உறங்க வைப்பதும், பிடிக்கவில்லை என்றாலும் பள்ளிக்கு போவது போன்ற சில (உண்மையில் அது ஒன்று தான் அவனுக்குப் பிடிக்காது) கெட்ட கனாக்களும் நிறைந்தது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

(தொடரும்)

Wednesday, April 30, 2008

I had a few friends in my college, who din't know English. I never realized then, how difficult is to be with a particular language speaking community, when you do not know that language. Those guys used to struggle a lot in studies, having done their schooling completely in Tamil. I also din't realize the fact that it's very difficult to learn a language from scratch all of sudden. Now, having pushed into a Hindi speaking population and not knowing Hindi, I face so much problems in even relating to people. I know that people are always considerate enough and kind enough to speak in English even at my mere mention that I don know Hindi. But, I just wanted to follow some of my friends' way, to live with this difficulty and learn the new language, and this is what those guys did when they din't know even the basic sentences in English. But, now I know those guys are simply great! It's not really simple to be that way. It needs so much determination and you should never give it up until you beat it!! :)

Tuesday, July 03, 2007

Certain people have a lots of preferences in choosing people to move with. In this aspect, I classify people into three kinds - those who have prefences and would move only with preferred kind of people, those who have preferences but could sacrifice thier preferences and could move with any kind of people and the third kind have no preferences that is they move well regardless of the kind of people they encounter.

If we observe the word around, we can see a mix of these kind of people. Each of these characteristics will have its own advantages..

Being one in the first kind is of great use to oneself. You'll get whatever you want, but when you happen to find no one of your preference, you dip.
The second is the best, because you can adjust to any kind of situations, still you'll be able to reap whatever you want whenever you happen to find such people.
The third is something that is useless, you cannot go highly esteemable to your ownself, although you can have all laurels in the outer world..

Saturday, April 07, 2007

Ashes!!!
It really means something meaningful to me now!
When a cup of ashes of bails from a lost match can aspire "winning" and when a phoenix can be "re-born" from its own ashes, it really means something!!!

The revival of the old "ME", who would never expect nothing from nobody, who is a love-giver not a love-sucker, who is full of energy, comfidence and whatnot, is a sudden happening like a "BOOOOOOOOMMMMMMMM". The meloncholic me vanished, something like a dirty thing burning into "ashes", all of a sudden. Like "re-birth" and "aspiration" the old me was born out of that.

I now start valuing something that I believed it never can happen - what people call as "rebirth revival renaissance renewal" and "rejuvenation". The phoenix inside oneself, I think now, is a very powerful entity, that would transform one's suffering, one's woes, one's nonsenses into something blooming, buzzing and blazing, everything all of a sudden like waterflow from a pressure built dam, a transformation from an extremely (so called) tight mindset into a completely slack and liberal mindset, like a flock of a hundred birds getting freed from bondage inside a cage!!!

Sunday, September 10, 2006

Something that I liked...

sing, as if no one is listening.
dance, as if no one is watching.
love, as if you've never loved before.
live, as if heven is here on earth.

from the homepage of Orkut Buyokkokten...

There is always something in this world that drives us to go. But we never understand all these fancies that the World creates for us. How cute and kind, the World is ,to be so much concerned about us! I don know how others are, but I always see the World as a negative thing that tortures me. Rarely do I get realisations as to how beautifully and carefully does the World handle me.

Once in a blue moon, the meloncholic ME, allows me to realise this and today is one such day. I din't really want to miss out this rare occurence and thats why this post...